கல்லாறு-பர்லியார் மலையேற்றம் இன்று துவக்கம்

மேட்டுப்பாளையம் : கல்லாறு-பர்லியார் இடையே மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் துவங்கும் என மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கல்லாறு-பர்லியார் இடையே 3.5 கி.மீ., தூரம் அடர் வனப்பகுதியில், சுற்றுலா பயணிகள் மலையேற்றம் மேற்கொள்ளும் வகையில் புதிதாக கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி மலையேற்றம் திட்டம் துவங்கியது. இத்திட்டத்தின் வாயிலாக கல்லாறு பகுதி பழங்குடியினர் வேலைவாய்ப்பு பெற்றனர். சுமார் இதுவரை 450க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் பயணம் செய்துள்ளனர்.

இதனிடையே கடும் வெயில் நிலவி வந்ததால், வனத்தில் காட்டுத்தீ விபத்து அபாயம் நிலவியது.

இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 2 வது வாரத்திற்கு மேல் மலையேற்றம் சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் துவங்க உள்ளது.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:

கோடை வெயிலின் தாக்கத்தால் வனத்தில் காட்டுத்தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. மேலும், வனவிலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக இடப்பெயர்ச்சியும் நடைபெற்றதால், இந்த மலையேற்ற சுற்றுலா கடந்த பிப்ரவரி மாதம் 2வது வாரம் முதலே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

தற்போது கோடை மழை நன்கு பெய்துள்ளது. வனத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று முதல் மலையேற்றம் திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது. http://trektamilnadu.com இல் புக்கிங் செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement