தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

9

சென்னை: ''உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள். தமிழகத்தில் சாமானிய மக்களுக்கான ஆட்சி நடக்கிறது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள். தி.மு.க., அரசு தொழிலாளர்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது.



உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்காக ரூ.2,464 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. தொழிலாளர்கள் பிரச்னைகளை, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என அறிவுறுத்துவேன். உழைக்கும் தொழிலாளர்களுக்காக என்றைக்கும் தி.மு.க., அரசு துணை நிற்கும்.


உங்களுக்காக உழைக்கும் தி.மு.க., அரசுக்கு தொழிலாளர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என முதலில் கேட்பேன். தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சாமானிய மக்களுக்கான ஆட்சி நடக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தலைவர்கள் வாழ்த்து




அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

உழைப்பும் அர்ப்பணிப்புமே நம் நாட்டைக் கட்டமைக்கிறது. உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும், 'மே' தின நல்வாழ்த்துகள்.


பா.ஜ., முன்னாள் தலைவர், அண்ணாமலை

தொழிலாளர்களின் உரிமையையும், சிறப்பையும், தியாகத்தையும் குறிக்கும் உழைப்பாளர் தினமான இன்று, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரின் கடும் உழைப்புக்கான பலன்கள் நிறைவாகக் கிடைத்திடவும், நல் ஆரோக்கியத்துடன் அனைவரின் வாழ்வு சிறந்திடவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ம.நீ.ம. தலைவர், கமல்

வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பது சொல் அல்ல செயல் என்பதை உணர்ந்து, உழைத்து உயர்வதில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த மே தின வாழ்த்துகள்.

தமிழக வெற்றிக்கழகம் தலைவர், விஜய்

ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி, உறுதியை, ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!

உழைப்பாளர் உரிமை காப்போம்! இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

மரியாதை...!



உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை மே தினப் பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Advertisement