காலாவதி 'ரஸ்க்' பாக்கெட்கள் பல்லடம் சாலையோரம் வீச்சு

பல்லடம் : தமிழகத்தில், விதிமுறை மீறி மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி சிறை தண்டனை வழங்கப்படும் என்ற சட்ட திருத்த மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், உணவுப் பொருள், பிளாஸ்டிக் மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டுவது தொடர்பான எந்த ஒரு கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுவதில்லை.

பல்லடம் வட்டாரப் பகுதியில், கழிவுகள் கொட்டுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பல்லடம்- - உடுமலை ரோடு, சித்தம்பலம் பகுதியில், விவசாய நிவத்தை ஒட்டி காலாவதியான 'ரஸ்க்' பாக்கெட்டுகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. விளை நிலம் அருகே கொட்டப்பட்டுள்ள காலாவதி உணவுப் பொருட்களை, கால்நடைகள் உண்டால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், காலாவதி உணவு பொருட்கள் பகிரங்கமாக ரோட்டில் வீசப்பட்டுள்ளன.

இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, காலாவதி உணவு பொருட்களை ரோட்டில் வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement