கள்ளக்குறிச்சி கமிட்டியில் மஞ்சள் ஏலம்

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் மஞ்சள் வரத்து அதிகமானால், சின்னசேலத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டிகளில் மஞ்சள் சந்தை துவக்கப்படும் என விழுப்புரம் விற்பனைக் குழு செயலாளர் சந்துரு தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் சராசரியாக 2,500 ஹெக்டர் பரப்பில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் 8,000 குவிண்டால் பதப்படுத்தப்பட்ட மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது.

சாகுபடி செய்யப்படும் கிழங்கு மற்றும் விரலி மஞ்சளை விவசாயிகள், ஈரோடு, நாமக்கம், சேலம், ஆத்துார் உள்ளிட்ட மார்க்கெட் கமிட்டிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் போக்குவரத்து செலவு, கால தாமதம் ஏற்படுகிறது.

இதைத்தவிர்த்து மாவட்ட விவசாயிகளுக்கு எளிதில் மஞ்சல் விற்பனை செய்ய ஏதுவாக சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மஞ்சள் விற்பனை துவங்கி உள்ளது. அனைத்து திங்கட்கிழமைகளில் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது.

கடந்த 28 ம் தேதி நடந்த ஏலத்தில் சின்னசேலம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 15 விவசாயிகள் 3,442 கிலோ மஞ்சளை சின்னசேலம் கமிட்டியில் விற்பனை செய்தனர்.

இதில் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.16,500; கிழங்கு மஞ்சள் ரூ.14,500; என அதிகபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டது. ஈரோடு, சேலம் பகுதி வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு வர்த்தகம் செய்தனர்.

அதனால் சின்னசேலம் கமிட்டியில் நடக்கும் மஞ்சள் சந்தைக்கு, நம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்த மஞ்சளை விற்பனைக்கு எடுத்து வர வேண்டும். அதிகளவில் விவசாயிகள் மஞ்சள் கொண்டுவரும் பட்சத்தில் இத்திட்டம் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டியிலும் விரிவுபடுத்தப்படும்.

மேலும் விபரங்களுக்கு வட்டார உதவி தோட்டக்கலை இயக்குனர், வேளாண் வணிகத்துறை அலுவலர் மற்றும் சின்னசேலம் மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளரை 89259 02926 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement