"போர் துவக்கத்தை நீங்கள் சொல்லுங்கள், முடிவை நாங்கள் சொல்கிறோம்" - பாகிஸ்தான் 'உதார்'

13

இஸ்லாமாபாத்: போர் எங்கே, எப்போது துவங்குவது என நீங்கள் (இந்தியா) முடிவு செய்யுங்கள், இறுதி முடிவை நாங்கள் (பாகிஸ்தான்) அது எங்கு முடியும் என்பதை சொல்கிறோம்" என பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் அடாவடியாக பேசி இந்தியாவை கடுப்பேற்றி உள்ளார்.



சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவம் தயார்





லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி கூறியிருப்பதாவது: இந்தியா ஏதேனும் தாக்குதலை நடத்தினால், அதற்கு வலுவான மற்றும் நன்கு சிந்திக்கப்பட்ட பதிலடி கொடுக்கப்படும். "தாக்குதல் நடைபெறும் இடத்தை இந்தியா தீர்மானிக்கும், ஆனால் அது எங்கு முடியும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம்". தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என மூன்று முனைகளிலும் பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை முழுமையாக தயாராக இருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா எப்படி ஒரு சில நிமிடங்களில் முடிவு செய்தது? தாக்குதல் நடந்த இடம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (எல்ஓசி) சுமார் 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இவ்வளவு கடினமான பாதை வழியாக யாராவது 10 நிமிடங்களில் அங்கு எப்படி அடைய முடியும்?" தேர்தலுக்கு லாபம் பார்க்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சூழலை உருவாக்க இந்திய அரசு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களைப் பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement