ஸ்டூடியோவில் திருடியவரின் 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி

சென்னை, வேளச்சேரி, எம்.ஜி.ஆர்., நகர் ஓராண்டியம்மன் கோவில் தெருவில், ஸ்ரீபாலாஜி டிஜிட்டல் ஸ்டூடியோ உள்ளது. இதன் உரிமையாளர் ராமமூர்த்தி.

கடந்த 2021ம் ஆண்டு ஆக., 7ம் தேதி ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து, 22,500 ரூபாய் மற்றும் கேமரா திருடு போனது.

இது குறித்து, வேளச்சேரி போலீசார் விசாரித்தனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த சசிகுமார், 19, ஸ்ரீதர், 22, பைரோஸ்கான், 20, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 18வது பெருநகர குற்றவியல் நடுவர் ஆர்.சுப்பிரமணியன் முன் நடந்து வந்தது.

சசிகுமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், இரண்டு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தும், மற்ற இருவரையும் விடுவித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த 2023ல் வெளியான தீர்ப்பை எதிர்த்து, சசிகுமார் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை, நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வி.பாண்டியராஜ் விசாரித்தார். போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை; காவலில் வைத்து ஒரு மாதத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டதால், இது பாதகத்தை ஏற்படுத்தும் என்ற மேல்முறையீடுதாரர் தரப்பு வாதம் ஏற்று கொள்ளத்தக்கது அல்ல' எனக் கூறி, சசிகுமாரின் இரண்டு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

Advertisement