சூறாவளி காற்றுடன் கனமழை: வெள்ளக்காடான கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில், சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால், நகரில் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.

கிருஷ்ணகிரியில் நேற்று மாலை, 4:30 மணிக்கு, பலத்த சூறாவளி காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி வனத்துறை அலுவலகம், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில், மரங்கள் முறிந்து விழுந்தன.

பழையபேட்டை, காந்தி சிலை அருகே இருந்த உயர் மின்கோபுரம் சாலையில் சாய்ந்ததில், அருகில் இருந்த இரு மின்கம்பங்கள் கீழே சாய்ந்தன. நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டில், 3 அடிக்கு தண்ணீர் தேங்கியதால் பயணியர் சிரமத்துக்குள்ளாகினர். சாய்ந்த மின்கம்பங்களை, மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர், மரக்கிளைகளை அகற்றினர். பல இடங்களில் கழிவுநீருடன் கலந்து, மழைநீர் சாலையில் ஓடியது.

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின பொதுக்கூட்டம் நேற்று மாலை நடக்க இருந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடை, பந்தல், கனமழையால் சரிந்தது. இதனால் பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. பாதிப்படைந்த பகுதிகளை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பார்வையிட்டார்.

Advertisement