அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ராஜினாமா

வாஷிங்டன் : அமெரிக்காவின் ராணுவ திட்டங்களை பத்திரிகையாளரிடம் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் சிக்கிய, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், 51, நேற்று அந்த பதவியில் இருந்து விலகினார்.

அமெரிக்க அதிபராக, கடந்த ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, மைக் வால்ட்ஸ் என்பவரை நியமித்தார்.

மேற்காசிய நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் திட்டங்களை, வாஷிங்டனை தலைமையகமாக வைத்து செயல்படும், 'தி அட்லாண்டிக்' என்ற பிரபல இதழ், கடந்த மார்ச்சில் வெளியிட்டது. அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், இந்த பத்திரிகைக்கு முன்னரே தெரிய வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விசாரணையில், தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும், 'சிக்னல்' என்ற செயலியில், அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவில், தவறுதலாக, 'தி அட்லாண்டிக்' இதழின் ஆசிரியர் ஜெப்ரி கோல்ட்பெர்க்கை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் சேர்த்தது தெரிய வந்தது.

ஜெப்ரி கோல்ட்பெர்க்கை குழுவில் தவறுதலாக சேர்த்ததாகவும், தனிப்பட்ட முறையில் அவரை தெரியாது என்றும் மைக் வால்ட்ஸ் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை, மைக் வால்ட்ஸ் நேற்று ராஜினாமா செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப்புக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement