கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாப பலி; 80 பேர் காயம்

2


பனாஜி: கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


கோவாவில் ஸ்ரீகாவோவில் லைராய் தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடந்த திருவிழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


கோவா முதல்வர் பிரமோத் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்த்தார். கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.



கோவில் விழாவில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பிரதமர் மோடி இரங்கல்



லைராய் தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:



கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.



காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement