அரசு மருத்துவமனையில் ஆட்டோக்களுக்கு 'செக்'

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் அத்துமீறி நிறுத்தப்படும் தனியார் டூவீலர், கார்களை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனை பணியாளர்களுக்கு தனி ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது. நோயாளிகள் ஆட்டோவில் மருத்துவமனை உள்ளே வரலாம், ஆனால் மறு சவாரிக்காக காத்திருக்க அனுமதியில்லை என டீன் அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார்.

மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், பிற பணியாளர்களின் 2700 டூவீலர்களை மருத்துவமனையில் 13 இடங்களில் 'பார்க்கிங்' செய்வதற்கான அனுமதி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. 8 இடங்களில் கார்களை நிறுத்துவதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 300 கார்களுக்கு ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ளது. 90 சதவீத பணியாளர்களுக்கு ஸ்டிக்கர் வழங்கப்பட்டுள்ள நிலையில் முன்பக்க, பின்பக்க செக் போஸ்ட்டில் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள், வேன்கள் நிற்பதற்கு தடை உள்ளது.

டீன் கூறியதாவது: ஆட்டோக்கள் நோயாளிகளை உள்ளே கொண்டு வந்து விட தடையில்லை. இறக்கி விட்டபின் அங்கேயே நின்று மறுசவாரிக்காக காத்திருக்க அனுமதியில்லை.

தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து இரண்டு பேட்டரி கார்கள் வேண்டுமென கேட்டுள்ளோம். அவை வந்து விட்டால் நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்ல முடியும். மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் நிறைய இருப்பதால் அவற்றை மார்ச்சுவரி பகுதியில் வரிசையாக நிறுத்தியுள்ளோம். நோயாளிகள் தனியார் ஆம்புலன்ஸ் தான் வேண்டுமென தெரிவித்தால் அந்த நேரம் உள்ளே வர அனுமதி வழங்குகிறோம் என்றார்.

Advertisement