டில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய கும்பல் சிக்கியது; வங்க தேசத்தினர் 6 பேர் உட்பட 11 பேர் கைது

7

புதுடில்லி: டில்லியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் ஆறு பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய இந்தியர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.


டில்லியில் வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக குடியேறியவர்களை இந்தியாவிற்குள் நுழைய உதவிய ஒரு கும்பலை போலீசார் கண்டுபிடித்தனர்.

சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் ஆறு பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய இந்தியர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சட்ட விரோதமாக குடியேறியவர்களில் முக்கியமான நபராக 55 வயதான சந்த் மியாவால் இருந்துள்ளார். இவர் நான்கு வயதில் இந்தியாவிற்குள் நுழைந்து போலி ஆவணங்கள் தயாரித்து வசித்து வந்துள்ளார்.


இவர், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் நாட்டில் நிரந்தரமாகத் தங்கி வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக, போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். மேற்குவங்கம் மற்றும் மேகாலயா வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய சாந்த் மியா ரூ. 20,000 முதல் ரூ.25,000 வசூலித்ததாக போலீசார் தெரிவித்தனர்.


சந்த் மியாவைத் தவிர, கைது செய்யப்பட்ட மற்ற வங்கதேச நாட்டவர்கள் அஸ்லம், முகமது அலி ஹுசைன், முகமது மிசான், ராடிஷ் மொல்லா, பாத்திமா அப்ரோஸ்
என்பது விசாரணையில் தெரிய வந்தது.


கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய கூட்டாளிகளும் முகமது அனிஸ், ரஞ்சன் குமார் யாதவ், ரஹிசுதீன் அலி, ஷபீர் மற்றும் லோக்மான் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்தார். அவர்கள் போலி ஆதார் அட்டைகள், பிறப்பு மற்றும் சாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பிற ஆவணங்களைத் தயாரித்து வங்கதேசத்தினர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய உதவி செய்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது.


வங்கதேசத்தை சேர்ந்த சந்த் மியாவால் அளித்த தகவல் படி தான், சில தினங்களுக்கு முன் சென்னையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement