மருத்துவமனை மீது வான் வழி தாக்குதல்: தெற்கு சூடானில் 4 பேர் பலி

ஜூபா: தெற்கு சூடானில் டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் நடத்தும் மருத்துவமனை மீதான வான்வழி தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

டாக்டர் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு நடத்தும் மருத்துவமனை தலைநகர் ஜூபாவிலிருந்து சுமார் 475 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓல்ட் பங்காக் எனப்படும் வடக்கு நகரத்தில் அமைந்துள்ளது.


டாக்டர் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு 1971 இல் பாரிஸில் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு, இனம், மதம், அரசியல் நம்பிக்கை போன்ற வேறுபாடுகளின்றி அனைவருக்கும் உதவிகளை வழங்குகிறது.
போர் மற்றும் உள்நாட்டு குழப்பங்களில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த அமைப்பின் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


மேலும் தொற்றுநோய்கள், காசநோய் (டி.பி.), எச்.ஐ.வி. மற்றும் பிற தொற்று நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்துதல், தொலைதூர சமூகங்களுக்கு அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்பு அணுகலை அதிகரித்தல் போன்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது.
இந்த நிலையில் இந்த அமைப்பு நடத்தி வரும் மருத்துவமனை மீது வான் வழித்தாக்குதல் நடந்தது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

சம்பவம் குறித்து டாக்டர் வித்தவுட் பார்டர்ஸ் அமைப்பு அறிக்கை:

வெள்ளத்தால் இடம்பெயர்ந்த பலர் உட்பட 40,000 குடியிருப்பாளர்களுக்கு மருத்துவ உதவிக்கான ஒரே ஆதாரமாக இருக்கும் அதன் மருத்துவமனை மீதான தாக்குதல் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். தெற்கு சூடானின் தொலைதூரப் பகுதியில் உள்ள தங்கள் மருத்துவமனை மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பது வருத்தமளிக்கிறது.
மருத்துவ ஊழியர்கள் மீதான தாக்குதல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் படி கடுமையான மீறல்.சர்வதேச சட்டத்தின்படி, போர் நேரத்திலும் மருத்துவமனைகள் தாக்கப்படக்கூடாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement