4 ஆண்டுக்கு பிறகு அரசு மாதிரி பள்ளிக்கு 7 ஏக்கரில் ஒரு வழியாக இடம் தேர்வு ; கட்டுமானப் பணிகளை விரைவில் துவங்க கோரிக்கை


பள்ளி-கல்வித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021 ல் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மாதிரி பள்ளி ரூ.56 கோடியில் மாணவர்களுக்கு தனித்தனியாக தங்கும் விடுதிகள், நவீன கம்ப்யூட்டர் லேப், அறிவியல் ஆய்வங்கள் அமைக்க திட்டமிட்டனர்.அதற்குரிய 7 ஏக்கர் இடம் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக ராமநாதபுரத்தில் தனியார் பொறியியல் கல்லுாரியில் செயல்பட்டது. அங்கும் இடமின்றி தற்போது ராமநாதபுரம் அருகே முத்துபேட்டையில் தனியார் பள்ளி வளாகத்தில் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.அரசு மாதிரி பள்ளி துவங்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2 வரை 450 மாணவர்கள் வரை படிக்கின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே 7 ஏக்கர் இடத்தை வருவாய்த்துறையினர் தேர்வு செய்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், பள்ளிகல்வித்துறையினர் இணைந்து விரைவில் அரசு மாதிரி பள்ளி கட்டுமான பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு மாதிரி பள்ளிக்குரிய 7 ஏக்கர் இடம் வருவாய்த்துறை மூலம் ஆர்.எஸ்.மடை அருகே திருப்புல்லாணி செல்லும் சாலையில் உள்ள அச்சடிபிரம்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவுடன் சென்னை நில நிர்வாக ஆணையர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.

அவரது அனுமதி கிடைத்தவுடன் கல்விதுறையிடம் நிலம்ஒப்படைப்பு செய்யப்பட உள்ளது. 2025-26ம் கல்வி ஆண்டில் மாதிரி பள்ளி கட்டுமானப் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Advertisement