கரும்பு டன்னுக்கு ரூ.4000 நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 அறிவிப்பு

நாமக்கல்:''கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்குவதாக சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்துள்ள நிலையில், அரசாணை எப்போது வெளியிடப்படும்,'' என, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான, 'சிபா' மாநில தலைவர் விருத்தகிரி, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:

நெல், கோதுமை, கரும்பு உட்பட, 23 விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு விலை நிர்ணயம் செய்கிறது. கரும்புக்கு மட்டும், நியாயமான ஆதாய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வேளாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. ஆனால், வேளாண் பொருட்களுக்கு விலை அறிவிப்பது மத்திய அரசு.

விதை சட்டம், விலை சட்டம், பூச்சி மருந்து சட்டம், உரச்சட்டம், நீர்பாசனம் சட்டம் இவை அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளன.

மாநில அரசு, மத்திய அரசுக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக நெல் கொள்முதல் செய்கிறது. மத்திய அரசிற்கான ஏஜன்ட் தான் மாநில அரசு. ஊக்கத்தொகை மட்டுமே மாநில அரசு வழங்குகிறது. மாநில அரசுக்கு, விளை பொருட்களுக்கு விலை சொல்லும் அதிகாரம் இல்லை.

மத்திய அரசு, கரும்பு கடன் ஒன்றுக்கு, 3,550 ரூபாய் அறிவித்துள்ளது. மாநில அரசு, கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்குவதாக, சட்டசபை மானிய கோரிக்கையில் அறிவித்துள்ளது. வரும், அக்., 1 முதல், 2025-26ம் ஆண்டுக்கான சர்க்கரை பருவம் துவங்குகிறது. அதற்கு முன், அரசாணை வெளியிட வேண்டும்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில், தென்னிந்திய சர்க்கரை ஆலை அதிபர்கள் சங்கமான சிஸ்மா, 'மாநில அரசிற்கு கரும்புக்கு விலை சொல்லும் அதிகாரம் இல்லை' என, நீதிமன்றத்தில் தடை பெற்றனர்.

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சியில், மத்திய அரசு அறிவிக்கும் விலையுடன், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதே நிலை தற்போதைய, தி.மு.க., ஆட்சியிலும் நீடிக்கிறது. மாநிலத்திற்கான அதிகாரத்தை நிலைநாட்டவில்லை.

தற்போது அறிவித்துள்ள விலை ஓரளவுக்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், அவற்றை அரசாணையாக வெளியிட்டால் தான் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement