தோல்வி பயத்தில் பா.ஜ., கூட்டணி பற்றியே எப்போதும் பேசுகிறார் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் பேட்டி

8


திருநெல்வேலி: ''முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை பற்றியே பேசி வருகிறார்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.



இது குறித்து நிருபர்களுக்கு நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் வயதான தம்பதி கொலை மற்றும் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்று. இந்த கொலை வழக்கில் இன்று வரை தீர்வு காணவில்லை. முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணியை பற்றியே பேசி வருகிறார்.


மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். திருநெல்வேலியில் குடிக்க தண்ணீர் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. இதில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அக்கறை காட்டாமல், தேர்தல் கூட்டணியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்



அடுத்த ஓராண்டு தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள், அவரவர் தொகுதிகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது, கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்பதையே எடுத்துரைக்கிறது. கவர்னரை பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்துவிட்டு, தற்போது கவர்னரிடம் அதிகார போட்டி இல்லை என்று முதல்வர் சொல்வதை எந்த வகையில் ஏற்றுக்கொள்வது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement