3 தலைமுறையாக ஆசிரியர் பணி; மூத்தவர்களை கவுரவித்து விழா எடுத்த பேரன், பேத்திகள்

மதுரை: மதுரையில் மூன்று தலைமுறையாக ஆசிரியராக பணியாற்றிய குடும்பத்தின் மூத்தவர்களை கவுரவம் செய்து விழா நடத்தி மகன், மகள், பேரன், பேத்திகள் ஆசி பெற்றனர்.



மதுரை மாவட்டம் பரவை அருகில் தனியார் மண்டபத்தில் மூன்று தலைமுறையாக ஆசிரியராக இருக்கும் குடும்பத்தில் மூத்தவர்களை வணங்கி ஆசி பெரும் நிகழ்ச்சி மற்றும் வாழ்வின் வழிகாட்டிய அவர்களுக்கு நன்றி தெரிவித்து கவுரவப்படுத்தும் விழா அவர்களது மகன், மகள், பேரன், பேத்திகளால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.


உசிலம்பட்டி அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி கிராமத்தில் வசித்த ஜெகநாதன்- கிருபை, இவர்களின் வழி வந்த மாணிக்கம் மங்கலம் ஆகியோரின் மகன், மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் ஆகியோர் தன்னை வழி நடத்திய பெரியோர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களிடம் ஆசி பெறவும் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விழா ஏற்பாடு செய்தனர்.


இவ்விழாவில் தமிழ் பாரம்பரிய கலைகளை போற்றும் வகையில் ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் சிறுவர்கள் சிலம்பாட்டம், புலியாட்டம் கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மூன்று தலைமுறையை சேர்ந்த அனைவரும் மேளதாளங்களுடன் ஆட்டம் ஆடிக்கொண்டு சீர் வரிசை எடுத்து வந்தனர்.


பின்பு பெரியோர்களான ஜீவானந்தம் கிரேஸ் ஞானசௌந்தரி ஸ்டெல்லா மற்றும் ஆனந்தி, பொற்செல்வி ஆகியோரை மேடைக்கு அழைத்து குத்துவிளக்கேற்றி அவர்களுக்கு மாலை மற்றும் மகுடம் அணிவித்து கவுரவம் செய்து அவர்களிடம் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.


இந்த விழாவிற்காக அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன்கள் என 200க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.


தற்போது உள்ள தலைமுறையினருக்கு மத்தியில் தமிழ் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் எடுத்துக்காட்டாகவும், முன் மாதிரியாகவும் இவ்விழா நடைபெற்றது.

Advertisement