சகாயத்திற்கு பாதுகாப்பு டி.ஜி.பி., அறிவிப்பு

சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் கலெக்டராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த பெரும் ஊழலை அம்பலப்படுத்தினார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சாட்சியம் அளிக்க, மதுரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை.

'தமிழக அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டதால், என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், மதுரை கோர்ட்டில் ஆஜராகவில்லை' என, அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியம் அளிக்க ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு, போதிய பாதுகாப்பை தமிழக காவல் துறை அளிக்கும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement