ரயிலை கவிழ்க்க சதியா? வாலிபரிடம் விசாரணை

பாலக்காடு: பாலக்காடு அருகே, தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்து, ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என, கைது செய்யப்பட்டுள்ள ஒடிசா வாலிபரிடம் என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு படை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒடிசா மாநிலம், பெல்லி பக்கேரி பகுதியை சேர்ந்தவர் பினோத் மல்லிக், 23. இவர், கேரள மாநிலம், பாலக்காட்டில், மலம்புழா ரயில் பாதை அருகே உள்ள கிரஷர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

கடந்த, 2ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து, ரயிலை கவிழ்க்க முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணையின் போது, ஒடிசாவில் உள்ள காதலியுடன் ஏற்பட்ட பிரச்னையால், ரயிலை கவிழ்க்க, தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்தாக தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

பினோத்மல்லிக்கின் பின்னணி குறித்து என்.ஐ.ஏ., போலீசார் விசாரித்தனர். அவரின் நடவடிக்கைக்கு பின்னணியில் பயங்கரவாத கும்பல் ஏதேனும் உள்ளதா என்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள், அந்த இளைஞரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement