ரூ.84 ஆயிரம் முறைகேடு புகார்; ரேஷன் ஊழியர் சஸ்பெண்ட்

திருப்பூர்; அனுப்பர்பாளையம் -1 ரேஷன் கடையில், ரேஷன் பொருட்களை முறைகேடாக விற்றது, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்தம், 84 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரேஷன் கடையில், 1,253 ரேஷன் கார்டுகள் உள்ளன; தங்கவேல், விற்பனையாளராக இருந்தார். பொதுமக்களுக்கு, 'பில்' போட்டுவிட்டு, அரிசி வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளதாக புகார் எழுந்தது. அதன்படி கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

ரேஷன் கடை பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில், இருப்பு சரிபார்ப்பின் போது, மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி உட்பட, 84 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பு குறைவாக இருந்துள்ளது. இதன்காரணமாக, ஓய்வு பெறும் நாளில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவுத்துறை அதிகாரிகள், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய விற்பனையாளர் மீதும், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement