சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு

8


கோவை: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தம்பதி விழுந்து பலியான விவகாரத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை சேர்ந்தவர் நாகராஜ், 44, மற்றும் இவரது மனைவி ஆனந்தி, 38. மகள் தீக் ஷிதா, 13 ஆகியோருடன், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தரிசனம் முடித்து, நேற்று நள்ளிரவு தாராபுரம் திரும்பினர். குள்ளாய்பாளையம் அருகே ரோடு விரிவாக்கம் செய்வதற்காக, தரைப்பாலம் கட்டுமான பணி நடந்து வந்தது.


அங்குள்ள 12 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த மொபட் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே தம்பதி பலியாகினர். இவர்களது 13 வயது மகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.


உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீக் ஷிதா மீட்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ரோடு பணி நடக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் முன்னதாக அறிவிப்பு பலகை இல்லை.



தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றியும் பெயரளவுக்கு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது தான் விபத்து காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர் சிவக்குமார், பொறியாளர் குணசேகரன், மேற்பார்வையாளர் கவுதம் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement