சிலை கடத்தல் விவகாரம்: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பேட்டி அளிக்கக்கூடாது என சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தன் பணிக்காலத்தில், திருவள்ளூர் டி.எஸ்.பி.,யாக இருந்த காதர் பாட்ஷா மற்றும் கோயம்பேடு சிறப்பு துணை ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தார்.
ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காகவே, தங்கள் மீது பொன் மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்ததாகவும், அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ., விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில், சி.பி.ஐ., வழக்கும் பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, காதர் பாட்ஷா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் மீதான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிப்பதால் விசாரணை தடைபடுகிறது என்று கூறி அவரது முன் ஜாமினை ரத்து செய்ய கோரி, சி.பி.ஐ., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்; சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பேட்டி அளிக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

மேலும்
-
கடலுக்கடியில் கண்ணி வெடி சோதனை: வெற்றிக்கொடி நாட்டிய டி.ஆர்.டி.ஓ.,
-
அபராதம் விதிக்காமல் லஞ்சம்: போலீஸ் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'
-
நிலம் அளப்பதற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ., தலையாரி இருவரும் கைது
-
ராஜஸ்தானுக்கு முதல் தங்கம்: 'கேலோ இந்தியா' துப்பாக்கி சுடுதலில்
-
சென்னை அணியில் உர்வில் படேல்
-
கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி 'டி-20' கிரிக்கெட்டில்