நிலம் அளப்பதற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ., தலையாரி இருவரும் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் அளவை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அருகே திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்டது பெறுவாக்கோட்டை கிராமம்.
இப்பகுதியை சேர்ந்த ஒருவர், தன் நிலத்தை அளந்து தர வேண்டும் என்று கூறி விஏஓ அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
நிலத்தை அளப்பதற்கு லஞ்சமாக ரூ.3500 தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது கூறினார்.
அதன்படி, ஆயிரம் ரூபாய் முன்பணம் தரப்பட்டது.
மீதமுள்ள 2500 ரூபாயை கொடுப்பதற்கு முன்னதாக, லஞ்சம் கேட்பது பற்றி மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அவர்களது ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரியிடம் மனுதாரர் வழங்கினார்.
அதை அவர்கள் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணைக்குப் பிறகு, லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., நைனா முகமது 31, தலையாரி (கிராம உதவியாளர்) சித்ரா 48, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.