ஒடிஷாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கிற்கு ரஷ்யா கவுரவம்

28

புதுடில்லி: இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் நாஜி படைகளுக்கு எதிரான ஸ்டாலின்கிராட் போரில், சோவியத் யூனின் வெற்றிக்கு உதவிய ஒடிஷாவின் மறைந்த முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கை ரஷ்யா கவுரவித்துள்ளது.


ஒடிஷாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள நிறுவனருமான பிஜு பட்நாயக், 1936ல் ராயல் இந்திய விமானப் படையில் சேர்ந்தார். 'டக்ளஸ் சி - 47, ஸ்கைட்ரைன்' போன்ற சரக்கு போக்குவரத்து வினியோக விமானங்களை இயக்கினார்.


கடந்த, 1941 - 45ல் நடந்த இரண்டாம் உலகப் போரின் போது, அப்போதைய சோவியத் யூனியன் படையினருக்காக, ராயல் இந்திய விமானப்படை வீரராக விமானங்களை இயக்கினார்.


அப்போது நடந்த ஸ்டாலின்கிராட் போரில் நாஜி படைகளை தோற்கடிக்க நடந்த யுத்தத்தில், சோவியத் படைகளுக்கு தேவையான ஆயுதங்களை விமானத்தில் பலமுறை பறந்து வினியோகித்ததல் பிஜு பட்நாயக் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


இதை கவுரவிக்கும் வகையில் டில்லியில் உள்ள ரஷ்ய துாதரகத்தில் பிஜு பட்நாயகிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவு பலகையை பட்நாயக் மகனும், ஒடிஷா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் மற்றும் இந்தியாவுக்காக ரஷ்ய துாதர் டெனிஸ் அலிபோவ் நேற்று திறந்து வைத்தனர்.

Advertisement