இன்று இடி மின்னலுடன் மழை: வானிலை மையம் தகவல்

சென்னை: 'தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:




தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், 8; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சாத்துார் ஆகிய இடங்களில் தலா, 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மே, 13 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்றும், நாளையும் வெப்பநிலை, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement