வானகரம் காதலியை படமெடுத்து 'ஐபோன்' கேட்டு காதலன் மிரட்டல்

வானகரம், கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 21 வயது பெண்ணும், அகமது மாஹீர் என்பவரும், காதலித்து வந்தனர். அகமது மாஹீரிடம் பேசுவதை, சில மாதங்களாக அப்பெண் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி, மொபைல் போனில் அப்பெண்ணிடம் தொடர்பு கொண்ட அகமது மாஹீர், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 'ஐ போன்' வாங்கி தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அவற்றை வாங்கி தரவில்லை என்றால், பழகும்போது ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை, அப்பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு அனுப்புவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அப்பெண்ணின் புகாரின்படி, வானகரம் போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மாங்காடு பகுதியைச் சேர்ந்த அகமது மாஹீர், 21, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement