மாநாட்டு நிபந்தனைகளுக்கு உத்தரவாதம் ஐ.ஜி.,யிடம் அளிக்க பா.ம.க.,வுக்கு உத்தரவு

சென்னை:'மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று, வடக்கு மண்டல ஐ.ஜி.,யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்' என, பா.ம.க.,வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில், நாளை மறுநாள் பா.ம.க., சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி, ஸ்ரீபெரும்புதுாரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'சித்ரா பவுர்ணமி நாளில் பா.ம.க., மாநாடு நடத்துவதால், பக்தர்கள் பாதிக்கப்பவர். 2013ம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம், 20 சதவீதம் இடஒதுக்கீடு கோரி நடத்தப்பட்ட போராட்டங்களிலும், வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், 'மாநாடு நடக்கும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கான வீடியோவையும், நீதிபதிகளிடம் காட்டினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவீந்திரன், ''மாநாட்டுக்கு, 40க்கும் மேற்பட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார்.

பா.ம.க., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, ''காவல்துறை விதித்துள்ள அத்தனை நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். அசம்பாவித சம்பவங்களுக்கு இடம் கொடுக்காமல், அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும்,'' என, உறுதியளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாநாட்டிற்கு அரசு விதித்துள்ள நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்றப்படும் என, உத்தரவாத மனுவை, வடக்கு மண்டல ஐ.ஜி.,யிடம், பா.ம.க., வழங்க வேண்டும். மாநாட்டுக்கு வருபவர்கள் எந்த ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்து வரக்கூடாது. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள், முறையாக காவல் துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும்.

மாநாட்டின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும். மாநாடும், சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், வடக்கு மண்டல ஐ.ஜி., கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை, அரசு விதிக்கலாம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

மனு தள்ளுபடி

பா.ம.க., சார்பில் நடத்தப்படும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கூடாது என, வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'இந்த மாநாட்டால் வடநெமிலி பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்' என, மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.விக்டோரிய கவுரி, மனுவை தள்ளுபடி செய்தார்.***

Advertisement