ஒற்றை யானையை விரட்ட வந்தது மேலும் ஒரு கும்கி

தொண்டாமுத்துார் : பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றைக்காட்டு யானையை விரட்ட, நரசிம்மன் என்ற கும்கி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக, சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவை பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் பகுதியில், ஒற்றைக்காட்டு யானை சுற்றி வருகிறது. அவ்வப்போது, உணவு தேடி, கோவில் சமையலறை, கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை சேதப்படுத்தியும், பக்தர்களை துரத்தியும் வந்தது. இதனையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், ஒற்றைக்காட்டு யானையை விரட்டவும், கடந்த, 1ம் தேதி, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து, நரசிம்மன் என்ற கும்கி யானை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், நரசிம்மனுக்கு துணையாக, டாப்ஸ்லிப் யானைகள் முகாமிலிருந்து, சின்னத்தம்பி என்ற கும்கி யானை நேற்றுமுன்தினம் இரவு, பூண்டிக்கு வனத்துறையினர் கொண்டுவந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ''ஒற்றை காட்டு யானையை விரட்ட, ஏற்கனவே நரசிம்மன் வரவழைக்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் பாதுக்காப்பு கருதி, கோவை வனப்பகுதியில் பழக்கப்பட்ட சின்னத்தம்பியும் வரவழைக்கப்பட்டுள்ளது. ஒற்றை காட்டு யானையை, 24 மணிநேரமும் கண்காணிக்க, 12 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது,'' என்றனர்.

Advertisement