தாவரவியல் பூங்கா அருகே நாயை கவ்வி சென்ற சிறுத்தை; 'கிளன்ராக்' பகுதி குடியிருப்பு வாசிகள் 'பீதி'

ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள 'கிளன்ராக்' பகுதியில் வீட்டில் நுழைந்த சிறுத்தை நாயை கவ்வி சென்றது.

ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்கு அச்சுறுத்தலால் இரவில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காட்டெருமை, குரங்குகள் பல காய்கறி தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே கிளன்ராக் பகுதியில், நித்தின் சந்திரசேகர் என்பவரின் வீட்டில் அதிகாலையில் நுழைந்த சிறுத்தை நாயை கவ்வி சென்றுள்ளது. சிறுத்தை நடமாடுவது, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பொது மக்கள் கூறுகையில்,'தாவரவியல் பூங்கா பகுதியில் பல காட்டேஜ்கள் உள்ளன.

சுற்றுலா பயணிகளும் தங்கி உள்ளனர். இங்கு இரவில் சிறுத்தை நடமாடுவதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், இங்கு நடமாடும் சிறுத்தைய கூண்டு வைத்து பிடித்து முதுமலையில் சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement