சிங்கபெருமாள் கோவிலில் அடுத்தடுத்து 5 வாகனங்களில் மோதிய சரக்கு லாரி

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, அடுத்தடுத்து ஐந்து வாகனங்களில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

சேலம் மாவட்டம், ஆத்துாரில் இருந்து மஞ்சள் லோடு ஏற்றிக்கொண்டு, 'அசோக் லேலண்ட்' சரக்கு லாரி, நேற்று அதிகாலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சரக்கு லாரியை செங்கல்பட்டு, ஆத்துார் பகுதியைச் சேர்ந்த பொன்னு துரை, 49, என்பவர் ஓட்டினார். ஜி.எஸ்.டி., சாலையில் சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் சந்திப்பு அருகில் வந்த போது, லாரி கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது, முன்னால் சிக்னலில் சென்ற கார், இரண்டு மஹேந்திரா வேன்கள், ஒரு கன்டெய்னர் லாரி உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் மீது மோதியது.

இதில், சரக்கு வாகனத்தின் முன்பக்கம் நொறுங்கி, பொன்னுதுரை காலில் முறிவு ஏற்பட்டது.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார்,'கிரேன்' இயந்திரத்தின் உதவியுடன், சாலை நடுவே நின்ற சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement