சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்

ராய்கர்: சத்தீஸ்கரில் காட்டு யானையால் தாக்கப்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தின் தரம்ஜெய்கர் வனப்பகுதிக்கு உட்பட்ட பதரன்பூர் கிராமம் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் நேற்று இரவு கோடை வெப்பம் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு வெளியே துாங்கி கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரி கூறியதாவது:

யானை முதலில், காசியா ராம் யாதவ் 35, அவரது மனைவி சுசிலா 30, ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் சுசிலா உயிரிழந்தார். அவரது கணவர் காசியா ராம் யாதவ், பலத்த காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதைதொடர்ந்து அந்த யானை, அருகில் உள்ள பகுதிக்கு சென்று மற்றொரு பெண்ணையும் தாக்கியது. யானை தாக்கிய அந்த பெண்ணும் உயிரிழந்தார். அந்த பெண்ணின் பெயர் சுனிதா லோஹரா 45, என தெரியவந்துள்ளது.உயிரிழந்த இரு பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.யானைகள் அடிக்கடி வரும் பகுதிகளில் எச்சரிக்கை அமைப்புகள் விரைவில் நிறுவப்படும்.

இவ்வாறு வனத்துறை அதிகாரி கூறினார்.

Advertisement