அமைப்புசாரா தொழிலாளருக்கு இதுவரை ரூ.50 கோடிக்கு உதவி

திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில் இயங்கும், தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வாயிலாக, 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகின்றன.

பதிவு செய்த தொழிலாளருக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி உதவி, மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்தால் மரணத்துக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு, வீட்டு வசதி திட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி வீட்டில், வீடு ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும். அல்லது, தொழிலாளர், 300 சதுரடி பரப்பில் சொந்தமான இடத்தில் வீடு கட்ட, நான்கு லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

உதவி கமிஷனர் செந்தில்குமரன் அறிக்கை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வி உதவியாக 43 ஆயிரத்து 926 தொழிலாளருக்கு, ஒன்பது கோடியே, 24 லட்சத்து, 31 ஆயிரத்து, 900 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவியாக, 817 பேருக்கு ஒரு கோடியே, 24 லட்சத்து, 92 ஆயிரம் ரூபாய். மகப்பேறு உதவியாக, 15 ஆயிரம் ரூபாய்; கண் கண்ணாடி உதவியாக, 58 ஆயிரத்து, 900 ரூபாய்.

இயற்கை மரண உதவியாக 1365 பேருக்கு நான்கு கோடியே, 89 லட்சத்து, ஏழாயிரம் ரூபாய், விபத்து மரண உதவியாக, 35 பேருக்கு 42.05 லட்சம் ரூபாய், பணியிடத்து மரண உதவியாக, 35 லட்சம் ரூபாய். ஓய்வூதியமாக, 9,410 தொழிலாளர்களுக்கு, 33.63 கோடி ரூபாய், 69 தொழிலாளர்களுக்கு, 23.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடு உட்பட, 55 ஆயிரத்து, 722 நலவாரிய உறுப்பினர்களுக்கு, கடந்த நான்கு ஆண்டுகளில், 50.03 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement