நங்கையர்குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியின் மையப்பகுதியில் நங்கையர் குளம் உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தில் பெண்கள் மட்டும் நீராடியதால் நங்கையர் குளம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இக்குளம் அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. மேலும், சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இறந்தவர்களின் ஈமச்சடங்குகளை, இக்குளத்தின் கரையிலே செய்து வருகின்றனர்.

தற்போது, இந்த குளம் முறையாக பராமரிப்பு இல்லாமலும், செடி, கொடிகள் வளர்ந்தும், ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்தும் உள்ளன. இதனால், இறந்தவர்களின் உறவினர்கள் குளக்கரையில் அமர்ந்து ஈமச்சடங்கு முடித்தவுடன், குளத்தில் குளிக்க இறங்கும்போது ஆகாயத்தாமரை செடிகளில் கால்கள் சிக்கி சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே, நங்கையர்குளத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement