மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

புஞ்சையரசந்தாங்கல்,:காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் வளர்ந்தும், துார்ந்தும் உள்ளதால், கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, கால்வாயை துார்வாரி சீரமைக்க புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement