காற்றுக்கு சேதமான வாழைகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

திருப்பூர்: கோடையில், காற்றுக்கு சேதமாகியுள்ள வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

கடந்த ஒரு வாரமாக அதிக வெப்பம் மற்றும் சூறாவளி காற்றுக்கு, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பெய்துவருகிறது. திடீர் சூறாவளி காற்றுக்கு, ஈரோடு, கோவை, திருப்பூர், திருச்சி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த இரண்டாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வாழைகள் சாய்ந்துள்ளன.

ஏக்கருக்கு 2 லட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்டு, பல்வேறு பணிகள் செய்த வாழைகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களை திருப்பிச்செலுத்துவது சிக்கலாகியுள்ளது.

மிகப்பெரிய அளவிலான பேரிடர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. சூறாவளி காற்றுக்கு பயிர்கள் பாதிக்கப்படும்போது இழப்பீடு வழங்கப்படுவதில்லை. வாழைக்கு பயிர் காப்பீடு செய்தாலும், ஒரு வருவாய் கிராமம் முழுவதும் அழிவு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது.

சிறு இடர்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்கும்வகையில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யவேண்டும். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement