பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!

6

புதுடில்லி: பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவுக்கு பெருமை என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உற்பத்தி மையம் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ராஜ்நாத் சிங் பேசியதாவது: நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்த ஆலை திறப்பு விழாவிற்கு நேரில் வந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் காரணம் உங்களுக்குத் தெரியும், நான் டில்லியில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

தக்க பதிலடி



ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. நம்மை சுற்றி உள்ள சூழ்நிலைகளை பார்க்கும் போது நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறை வேற்றுவது மிக முக்கியம். வாஜ்பாய் தலைமையில் விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி நமது வலிமையை உலகிற்கு காட்டினர்.

இந்தியாவுக்கு பெருமை



இந்தியாவை வளர்ப்பதில் நாம் மிகுந்த பலத்துடன் முன்னேற வேண்டும். பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவுக்கு பெருமை.நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க இது ஒரு சந்தர்ப்பம். வெறும் 40 மாதங்களில், இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது. உத்தரபிரதேச முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடைக்கலம்



ராவல்பிண்டியில் உள்ள பாக் ராணுவ தலைமையகம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்த்தி உள்ளோம். பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி உள்ளோம். பாகிஸ்தான் ராணுவம் தான் வழிபாட்டு தலங்கள், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement