சின்னதாராபுரத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மக்கள் வேண்டுகோள்
அரவக்குறிச்சி, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, சின்னதாராபுரம் பகுதியில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு பள்ளி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மின்வாரிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால், நாள்தோறும் உள்ளூர், வெளியூர் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், பொதுமக்கள் சாலையோரம் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர்.
கரூரிலிருந்து, தாராபுரம் செல்லும் சாலை என்பதால் அதிகளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக, காலை, 7:00 முதல், 9:00 மணி வரையிலும், மாலை, 4:00 முதல், இரவு, 9:00 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் கல் குவாரிகள் செயல்படுவதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் சாலையோரங்களில் இருக்கும் பயணிகள் மீது அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.