கூட்டுறவு சர்க்கரை ஆலை, நுாற்பாலை ஆய்வுக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் லிங்காரெட்டிப் பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருபுவனை கூட்டுறவு நுாற்பாலை ஆய்வுக் கூட்டம் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் நடந்தது.

கவர்னர் மாளிகையில் நடந்த கூட்டத்தில் கவர்னரின் செயலர் மணிகண்டன், கூட்டுறவுத் துறைச் செயலர் ஜெயந்த குமார் ரே, கூட்டுறவுத் துறை பதிவாளர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் நுாற்பாலையின் தற்போதைய நிலைமை, அவற்றை இயக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், அவற்றுக்கான காரணங்கள் போன்றவற்றை கவர்னர் கவனமாக கேட்டறிந்தார்.

ஊழியர்களின் எண்ணிக்கை, கரும்பின் தரம், மூலப் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல், அவற்றின் விலை உயர்வு, சம்பளப் பற்றாக்குறை ஆகியவற்றை காரணங்களாக அதிகாரிகள் முன்வைத்தனர்.

அதையடுத்து, ஆலைகளின் தற்போதைய நிலவரத்தை முன்னிறுத்தி துறை அமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோருடன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஏற்பட்டிருக்கும் தொய்வு நிலை மற்றும் காரணங்களை முறையாக ஆராய்ந்து அதற்கான தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

காலம் கடக்கும் நிலையில், நிர்வாகத்திற்கு இழப்புகள் அதிகரித்துக் கொண்டே போவதால் அரசின் நிதிச் சூழலை கருத்தில் கொண்டு சீரிய முடிவை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகளுக்கு கவர்னர் அறிவுறுத்தினார்.

Advertisement