ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி

மதுரை : ''பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதற்கு, ஒவ்வொரு இந்தியரும் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். பிரதமரை பாராட்டாத தி.மு.க., ராணுவ வீரர்களை பாராட்டுவதாக நாடகமாடுகிறது,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:

மதுரையில், அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தலை திறக்க முடியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், மேலிட அழுத்தம் உள்ளதாக சொல்கின்றனர். அமைச்சரின் பினாமியாக இருக்கும் போலீசார், அதிகாரிகளை மிரட்டுகின்றனர். தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தல் அனைத்துக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளதா? அ.தி.மு.க., ஆட்சியில் இதுபோன்று இடையூறு ஏற்படுத்தினோமா? அ.தி.மு.க., நிர்வாகிகளை பொய் வழக்கில் கைது செய்வோம் என போலீசார் மிரட்டுகின்றனர். இதற்கு பயப்படும் கட்சி அ.தி.மு.க., கிடையாது.

பாகிஸ்தானுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதற்கு, ஒவ்வொரு இந்தியரும் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோரை வழிநடத்தி, துாங்காமல் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். பிரதமரை பாராட்டாமல் ராணுவ வீரர்களை பாராட்டுவதாக தி.மு.க.,நாடகமாடுகிறது.

ஸ்டாலினுக்கு பதிலாக, அரசு செயலர்களை பாராட்டி ஊர்வலம் நடத்தினால், தி.மு.க.,வினர் ஏற்றுக்கொள்வார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement