இருக்கை வசதியில்லாத இ - சேவை மையம் மணிக்கணக்கில் காத்திருக்கும் பகுதிவாசிகள்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ - சேவை மையத்தில் இருக்கை வசதி இல்லாததால், பொதுமக்கள் மணிக்கணக்கில் நிற்க வேண்டியுள்ளது.

திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகராட்சி அலுவலக வளாகத்தில், 'இ - சேவை' மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருவள்ளூர் நகராட்சியைச் சேர்ந்தோர் புதிதாக ஆதார் கார்டு பெறவும், ஏற்கனவே பெற்ற ஆதார் கார்டில் பெயர், விலாசம், புகைப்படம் மாற்றம், திருத்தம் செய்யவும் வந்து செல்கின்றனர்.

தினமும் காலை முதல் மாலை வரை, 50க்கும் மேற்பட்டோர் இம்மையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த மையம் செயல்பட்டு வரும் இடத்தில், பொதுமக்கள் அமர இருக்கை வசதி இல்லை. மேலும், காலை 10:00 மணிக்கு மேல் ஆதார் சேவை மையம் திறக்கப்படுகிறது.

முன்னதாக வரும் பொதுமக்கள், அலுவலர்கள் வரும் வரை வெளியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. குழந்தைகள், கர்ப்பிணியர் மற்றும் முதியோர் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

சில நேரங்களில், ஆதார் மையத்தில் இணையதளம் செயல்படாததால், பல மணி நேரம் நிற்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், தற்போது கோடைக்காலம் என்பதால், அங்கு குடிநீர் உள்ளிட்ட எவ்வித வசதியும் இல்லை.

அடிப்படை வசதி இல்லாமலும், இருக்கை வசதி இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ - சேவை மையத்தில் இருக்கை, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement