கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோத்ஸவம்; இன்று தேரோட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 49வது பிரமோத்ஸவ விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த, 4ம் தேதி, கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.

தொடர்ந்து, புண்யாகவாஜனம், யாக சாலை துவக்கப்பட்டது. அவ்வகையில், 9ம் தேதி வரை தினமும் காலையில், பெருமாள், திருப்பல்லக்கில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலையில் வாகனங்களில் சிறப்பு அலங்காரத்திலும் வீதி உலா அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்றுமுன்தினம் காலை, பெருமாள், மோகினி அலங்காரத்தில் வீதி உலாவும், மாலையில், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நேற்று, கிருஷ்ணன் வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சியும், மாலையில் குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும், பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.

இன்று, திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. அதன்படி, காலை, 6:00 மணிக்கு மேல், 7:15 மணிக்குள் தேரில் ஏலப்பண்ணுதல், தேர் வடம் பிடித்தல், மாலையில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை, காலை தீர்த்தவாரி, மாலையில் துவாதச ஆராதனம், புஷ்ப பல்லக்கு திருவீதி உலா, வரும், 14ல் விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.

Advertisement