'எம். சாண்ட் விலை குறைக்காத குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை'
திண்டுக்கல் : 'தமிழக அரசு எம். சாண்ட் விலையில் ரூ.ஆயிரம் குறைத்துள்ளது. குறைக்காத குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என திண்டுக்கல்லில் தமிழக கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி, தமிழர்கள் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பொன்குமார் தலைமையில் நடந்தது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 20 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் புதிதாக வாரியத்தில் இணைந்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க., வின் 10 ஆண்டுகள் ஆட்சியில் 13 லட்சம் தொழிலாளர்கள் வாரியத்தை விட்டு வெளியேறியுள்ளனர். எம். சாண்ட் விலையில் ரூ. ஆயிரம் தமிழக அரசு குறைத்தும், பல குவாரி உரிமையாளர்கள் குறைக்காமல் உள்ளனர். விலை குறைக்காமல் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
உச்சநீதிமன்றத்தில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்ததால் தேவையான பகுதிகளில் மணல் குவாரிகள் திறந்து மணல், எம். சாண்ட் கிடைக்கவும், விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. இத்தொழில்கள் மேலும் வேகம் எடுக்கும் என்றார்.