ராணுவ வீரர்களை எங்களின் கண் இமைகளாக கருதுகிறோம்: சொல்கிறார் சீனிவாசன்

திண்டுக்கல் : ''ராணுவ வீரர்களை எங்களின் கண் இமைகளாக கருதுகிறோம்,'' என, திண்டுக்கல்லில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை, பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மட்டுமே, சட்டம் -- ஒழுங்கு பிரச்னை இல்லை என்று கூறுகின்றனர். விலைவாசி, மின் கட்டணம், குப்பை வரி என அனைத்து விலைவாசியும் உயர்ந்துள்ளது.

தற்போது போர் பதற்றம் இருப்பதால் அனைவரும் தேசப்பற்றுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும், உயிர் தியாகம் செய்து நாட்டை காக்கும் ராணுவ வீரர்களை மதிக்கிறோம். அவர்களை எங்களின் கண் இமைகளாக கருதுகிறோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது திராவிட மாடல் ஆட்சி கிடையாது. சிறுபான்மை, பெரும்பான்மை என, அனைத்து மக்களுக்கும் உறுதுணையாக இருப்பது அ.தி.மு.க., மட்டுமே.

மத்திய அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்த பிறகு தான், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவித்தது.

மேலும், இந்த சந்திப்பில் நிலுவை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொய் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement