வளசரவாக்கம் தீ விபத்தில் தம்பதி பலி; மாடியிலிருந்து குதித்து இருவர் தப்பினர்

சென்னை : வளசரவாக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி தம்பதி உயிரிழந்தனர்; சிறுவன் மற்றும் வேலைக்கார பெண், மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.
சென்னை வளசரவாக்கம், சவுத்ரி நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் நடராஜன், 78; வழக்கறிஞர். இவரது மனைவி தங்கம், 73. இவர்களுடன், மகன் ஸ்ரீராம், 50, மருமகள் ஷியாமளா, 45, பேத்தி ஸ்ரேயா, 20, பேரன் ஸ்ராவன், 18, ஆகியோர் வசிக்கின்றனர்.
இவர்கள் வசித்த பங்களா வீடு, 'டூப்பிளக்ஸ்' வகையைச் சேர்ந்தது. 'பால் சீலிங்' மற்றும் மர கட்டுமானத்தில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று மதியம் வீட்டின் தரை தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ, மளமளவென பங்களா முழுதும் பரவியது.
இதனால், கரும்புகை தொடர்ந்து வெளியேறியதால், முதல் தளத்தில் தங்கியிருந்த நடராஜன், தங்கம் ஆகியோரால் உடனடியாக வெளியேற முடியவில்லை. தங்கம் உடல்நலமின்றி படுத்த படுக்கையாக இருந்ததால், அவரை மீட்பதில் நடராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.
மகன், மருமகள், பேத்தி ஆகியோர், பணி நிமித்தமாக காலையில் அடையாறு சென்ற நிலையில், பேரன் ஸ்ராவன் மட்டும் இரண்டாவது தளத்தில் இருந்துள்ளார். வீட்டு வேலைக்கார பெண்ணான ராமாபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி, 26, மாடியில் துணி காயவைத்து கொண்டிருந்தார்.
பங்களா முழுதும் அதிகப்படியான புகை சுழன்றடித்ததால், மேல் மாடியில் இருந்து ஸ்ராவன், சரஸ்வதி ஆகியோரால், முதல் தளத்திற்கு வந்து நடராஜன், தங்கத்தை மீட்க முடியவில்லை.
அத்துடன் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள இரண்டாவது தளத்தில் இருந்து ஸ்ராவனும், மொட்டை மாடியில் இருந்து சரஸ்வதியும், வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த கார் நிறுத்தும் தளத்தின் மீது குதித்தனர். இதில், ஸ்ராவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சரஸ்வதியின் இடது காலில் முறிவு ஏற்பட்டது.
கரும்புகை வெளியேறியதை பார்த்த பக்கத்து வீட்டினர், தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அத்துடன், சரஸ்வதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விருகம்பாக்கம், மதுரவாயல், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி, ராமாபுரம் என, ஐந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. 15க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததால் உள்ளே செல்ல வழி தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர். அங்கிருந்தோர், ஜன்னல் கண்ணாடியை கல் வீசி உடைத்து, வீரர்களுக்கு வழி ஏற்படுத்தினர்.
எனினும், புகை அதிகளவில் வந்ததால், வீரர்களால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அந்நேரம் பார்த்து திடீரென மழையும் பெய்தது.
தொடர்ந்து, ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்து, இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பின், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, வீரர்கள் வீட்டினுள் நுழைந்தனர்.
உள்ளே படுக்கையில் உடல் கருகிய நிலையில் தங்கம், நடராஜன் இறந்து கிடந்தனர். அவர்களின் சடலங்களை மீட்ட வீரர்கள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீ விபத்து குறித்து, வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
வீட்டின் தரை தளத்தில் உள்ள பூஜை அறையில் இருந்து தீ பிடித்திருக்கலாம். மாடியில் பொருத்தப்பட்டுள்ள 'சோலார்' பேனல் வழி மின்சாரமும், மின் வாரிய மின்சாரமும் சந்திக்கும் பகுதியில் ட்ரிப் ஆகி தீ விபத்து நடந்திருக்கலாம். அந்த தீ, அலங்காரத்திற்காக செய்யப்பட்ட 'பால் சீலிங், இன்டீரியர்' வேலைப்பாடுகளில் மளமளவென பரவியதால், அதிகளவில் புகை வந்து, மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.
புகை வந்தால் அதை உடனடியாக உணரும் கருவி, தீயை தடுக்க எந்த வசதிகளும் வீட்டில் இல்லை. அதனால், வீட்டினுள் தீ வேகமாக பரவியது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.