ஆபரேஷன் சிந்துார் :பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்

17

புதுடில்லி: பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பயங்கரவாதிகளுக்கு துணைபோன பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறுஅதிரடி நடவடிக்கையை இந்தியா எடுத்தது.

பாகிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.


இதை எதிர்த்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்த தாக்குதலில் நிலை குலைந்த பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்தம் செய்ய முன் வந்தது. தன் இலக்குகள் அடையப்பட்டுள்ளதால் இந்திய ராணுவமும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.


இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விளக்கம் அளிப்பதற்காக, இன்று இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பிறகு நாட்டு மக்களிடம் முதன் முறையாக இன்று இரவு பேசுகிறார்.


பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, போர் நிறுத்தம் பற்றி பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் பிரதமர் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement