நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக நடவடிக்கை: ஜனாதிபதியுடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பதவியை பறிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 14 அன்று நீதிபதி வர்மாவின் டில்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவின் முதற்கட்ட விசாரணை முடிவில், நீதிபதி வர்மாவை நீதித்துறை பணியில் இருந்து நீக்குதல், அலகாபாத் ஐகோர்ட்டிற்கு இடமாற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டது. இந்த குழு மே 4ம் தனது அறிக்கையை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தது. இந்த குழுவின் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பி வைத்தார். யஷ்வந்த் வர்மா பதவி விலக மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் ஆகியோர்சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் எதற்காக நடந்தது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாவில்லை. இருப்பினும், யஷ்வந்த் வர்மாவின் பதவியை பறிக்க பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனகருதப்படுகிறது.