வரத்துக்கால்வாய்கள், வறண்ட ஊரணிகளை காப்பாற்றுங்கள் குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்

திருப்பரங்குன்றம் : 'நீர் வரத்து கால்வாய்கள், ஊரணிகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து காப்பாற்றுங்கள்' என குறைதீர் கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் துணைத் தாசில்தார் சாந்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. விவசாயிகள் மாரிச்சாமி, சிவராமன், பாண்டி, வடிவேல், பேயத்தேவர், மகாமுனி, மகேந்திரன் பேசியதாவது:

நிலையூர் பெரிய கண்மாய்க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற 2019ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. இதனால் கண்மாய்க்குள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் தார்ச் சாலை அமைக்க சேதப்படுத்திய மேட்டுமடையையும் சீரமைக்கப்படவில்லை. இதனால் 2 ஆண்டுகளாக விவசாயிகள் வருமானமின்றி அவதிப்படுகின்றனர். தனக்கன்குளத்தில் 7 ஊரணிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை காப்பாற்றுங்கள். அப்பகுதியில் பொதுப் பாதைகளையும் பலர் ஆக்கிரமித்துள்ளனர். மாடக்குளத்துக்கு தண்ணீர் வரும் கோர மடை வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கால்வாய் ஆக்கிரமிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. ஆக்கிரமித்து விட்டால் அகற்ற அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும். அது எளிதில் நடப்பதில்லை. தென்பழஞ்சி கண்மாய்க்குள் கருவேல் மரங்களை அகற்ற வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் மனுக்கள் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை என்றனர்.

Advertisement