'இந்திரா காந்தி அரசு கல்லுாரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடம்' ; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி : இந்திரா காந்தி அரசு கலைக் கல்லுாரிக்கு விரைவில், 47 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா நடக்க உள்ளதாக, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி இந்திரா நகரில் உள்ள இந்திரா காந்தி அரசு கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். உயர்கல்வி இயக்குனர் அமன் ஷர்மா, பள்ளிக் கல்வி இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எல்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது:

இந்திரா காந்தி அரசு கல்லுாரிக்கு, 47 கோடி மதிப்பில், கதிர்காமத்தில், புதிய கட்டடம் கட்டுவதற்கு விரைவில், அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது.

இந்த கல்லுாரியில், தொழில் சார்ந்த படிப்புகள் உள்ளன. படிப்பை முடித்த உடனே தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியும். இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள், உதவியாளர் தேர்வு எழுதி பணிக்கு வருகின்றனர். கலை கல்லுாரியில் படித்தவர்கள் தான் அலுவலக நிர்வாக திறமைக்கு வரவேண்டும். சென்டாக் மூலம் கலை கல்லுாரியில் படிக்க விரும்புவர்கள், இந்திரா காந்தி அரசு கல்லுாரியை தேர்வு செய்கின்றனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement