ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்

கடப்பா: ஆந்திராவில் ஏரி நீரில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கோடை விடுமுறையை கழிக்க கடப்பா மாவட்டத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சிறுவர்கள் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள ஏரியில் அவர்கள் குளிக்க சென்றுள்ளனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் நீச்சல் தெரியாத 5 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆனால், சிறுவர்கள் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடி அலைந்தனர். பிறகு, ஏரிப் பகுதிக்கு வந்து பார்த்த போது, சிறுவர்களின் ஆடைகள் கரையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பிறகு, ஏரியில் சிறுவர்களின் சடலங்களை தேடினர். சரன்,15, பர்து,12, ஹர்ஷா,12, தீக்ஷித்,12, தருண் யாதவ்,10, ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து, அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வலியுறுத்தியுள்ளார்.
