ஆங்கர் குன்றத்துார் - பல்லாவரத்தில் 200 ஆக்கிரமிப்பு அகற்றம்

குன்றத்துார்:குன்றத்துாரை மையப்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், சென்னை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலை குறுகலாக இருப்பதாலும், சாலையோர ஆக்கிரமிப்புகளாலும், எந்நேரமும் கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், இச்சாலை விரிவாக்கம் தொடர்பாக, அமைச்சர்கள் வேலு, அன்பரசன் தலைமையில், கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதைத்தொடர்ந்து, குன்றத்துார் அடுத்த கரைமா நகரில், சாலையின் இருபுறங்களிலும் உள்ள வீடு, கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை, போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணி, இரண்டு நாட்களாக நடந்து வருகின்றன.
இரண்டாவது நாளாக நேற்றும் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. ஆக்கிரமிப்பு வீடுகளில் உள்ள பொருட்களை பொதுமக்களே அகற்றிய நிலையில், 'பொக்லைன்' இயந்திரத்தை கொண்டு இடிக்கப்படுகின்றன.
இரண்டு நாட்களாக, 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டதால், அப்பகுதியில் கட்டட இடிபாடுகள், குவியல் குவியலாக தேங்கி கிடக்கின்றன.
பல்வேறு இழுபறிக்கு பின் சாலை மீட்புஈஞ்சம்பாக்கம் ராஜன் நகர், அனுமான் காலனி சாலை, 40 அடி அகலம் கொண்டது. இந்த சாலையை, 28 அடி வரை ஆக்கிரமித்து, 13 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இது குறித்து பொன் தங்கவேல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சிக்கு, 2023 செப்டம்பரில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து கடந்தாண்டு மே 3ம் தேதி, சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார இணை கமிஷனரிடம், பொன் தங்கவேல் புகார் அளித்தார்.மூன்று நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற, இணை கமிஷனர், சிறப்பு தாசில்தார் சரோஜாவுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், 5ம் தேதி பொன் தங்கவேலை, வீட்டிற்கு அழைத்த தாசில்தார் சரோஜா, ஆக்கிரமிப்பை அகற்ற லஞ்சம் கேட்டுள்ளார்.முதற்கட்டமாக, மூன்று லட்சம் ரூபாய் தந்தால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்குவேன் என, சரோஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், பொன் தங்கவேல் புகார் அளித்தார். வட்டார துணை கமிஷனர் அலுவலகத்தில், மூன்று லட்ச ரூபாய் வாங்கும்போது, போலீசாரிடம் சரோஜா சிக்கினார். உடந்தையாக இருந்த, போலீசாக பணிபுரியும் அவரது கணவர் பிரவீன், மற்றொரு போலீஸ்காரர் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், மாநகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், 13 ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றி சாலையை மீட்டனர்.