ரோட்டின் நடுவில் ஆபத்து ஏற்படுத்தும் இரும்பு தடுப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி பஸ்ஸ்டாப் பகுதியில் ரோட்டின் நடுவே தடுப்புச் சுவரின் மீது 4 மாதங்களுக்கு முன் அமைத்த இரும்புத் தடுப்புகள் சேதமடைந்து ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பழங்காநத்தம் ரவுண்டானா முதல் திருநகர் மூன்றாவது பஸ் ஸ்டாப் வரை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஹார்விபட்டி, திருநகர் பகுதியில் ரோட்டின் நடுவில் குறைந்த உயரத்தில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரில் ஹார்விபட்டி, திருநகர் பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் பொருத்தப்பட்டது.

ஹார்விபட்டி பஸ்ஸ்டாப் பகுதி தடுப்புகளில் சிலநாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தடுப்புக் கம்பிகள் சேதமடைந்து நீட்டிக் கொண்டுள்ளது. இதனால் டூவீலரில் செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர். இப்போது இரும்பு தடுப்புகளும் சேதம் அடைகின்றன.

தரமில்லாமல் தடுப்புச் சுவர், இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. ரோட்டின் நடுவிலுள்ள தடுப்புக் கம்பிகளை அகற்றிவிட்டு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement